12 வருடத்திற்கு முன்பே நாங்கள் செய்துவிட்டோம்...அமித்ஷாவுக்கு தக்க பதிலடி கொடுத்த பொன்முடி!

12 வருடத்திற்கு முன்பே நாங்கள் செய்துவிட்டோம்...அமித்ஷாவுக்கு தக்க பதிலடி கொடுத்த பொன்முடி!

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் தமிழ்வழியில் பாடத் திட்டங்களைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியா சிமெண்ட்ஸ் 75வது ஆண்டு பவள விழா:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான சீனிவாசனுக்கு சொந்தமான 'இந்தியா சிமெண்ட்ஸ்' நிறுவனத்தின் 75-வது ஆண்டு பவள விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஓ.பன்னீர் செல்வம், ஆந்திர மாநிலம் சார்பாக அம்மாநில நிதியமைச்சர் உப்பென்னா ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அமித்ஷா பேச்சு:

அப்போது நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழ்மொழி மிகவும் தொன்மையானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மொழியின் அருமையைத் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் தமிழ்வழியில் பாடத் திட்டங்களைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

பொன்முடி அறிக்கை:

இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்மொழி மிகவும் தொன்மையானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மொழியின் அருமையைத் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் தமிழ்வழியில் பாடத் திட்டங்களைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்” என மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள் நேற்று சென்னையில் நடைபெற்ற “இந்தியா சிமென்ட்ஸ்” நிறுவனத்தின் பவள விழாவில் பேசியிருக்கிறார்.

இதையும் படிக்க: பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய வீடியோ...கையும் களவுமாக பிடித்த பெண்... !

தமிழ்மொழியை அரியணையில் அமர்த்தி அழகு பார்ப்பதுதான் தலையாய பணி:

அன்னைத் தமிழ் மொழி மீது உள்துறை அமைச்சர் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்திற்கும் அக்கறைக்கும் முதலில் தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் எங்கள் தாய்மொழி; எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த மொழி. ஆகவே திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகின்ற காலத்தில் எல்லாம் தமிழ்மொழியை அரியணையில் அமர வைத்து அழகு பார்ப்பதுதான் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், அவர்கள் வழியில் ஆட்சி நடத்தும் எங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் தலையாய பணி.

10 ம் வகுப்பு வரை தமிழ்ப்பாடம் கட்டாயம்:

ஆகவே, தமிழ்மொழிக் கல்விக்காகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆற்றிய பணிகள் சிலவற்றை மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்களுக்கு நினைவூட்டிட விரும்புகிறேன். இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளை தமிழில் எழுதினால் அதிகம் பேர் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதற்காக தான், பள்ளிப்படிப்பில் 10-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தமிழ் கட்டாயப்பாடம் எனத் திராவிட முன்னேற்றக் கழக அரசில் சட்டமியற்றி, அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் வரை அங்கீகரித்தது.

நிதியுதவி அளிக்கும் திட்டம்:

கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நிதியுதவி அளிக்கும் திட்டம், முதன்முதலில் 1967-68-இல் ஆட்சிக்கு பொறுப்புக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் போது அறிவிக்கப்பட்டு, அது படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ஆண்டிற்குத் தமிழ்வழியில் பயிலும் ஒரு மாணவருக்கு 900 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமும் கழக அரசின் திட்டம்தான்!

2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார் கலைஞர்:

மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் இப்போது சுட்டிக்காட்டியுள்ள பொறியியல் பட்டப்படிப்பை முதன்முதலில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2010-ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தி விட்டார். இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொறியியல் படிப்பினைத் தாய்மொழியில் கற்க ஏற்பாடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டட (சிவில்) மற்றும் இயந்திரப் (மெக்கானிக்கல்) பொறியியல் படிப்புகளைத் தமிழில் அறிமுகம் செய்து, தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழ்வழி பொறியியல் கல்வி இன்றும் நடைமுறையில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழில் பொறியியல் படிப்பு நடைமுறையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

12 ஆண்டுஅளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்டு விட்டது:

12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்வழியில் பொறியியல் கல்வி தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு விட்டாலும், மருத்துவப் படிப்பு, அதாவது எம்.பி.பி.எஸ் தமிழில் கற்பதற்கு வழி செய்யவும் இப்போது தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மூன்று பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, எம்.பி.பி.எஸ் முதலாண்டு பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசை வலியுறுத்திய பொன்முடி:

எங்கள் அன்னைத் தமிழ்மீது காட்டியுள்ள அக்கறையோடு, சமஸ்கிருதத்திற்கு இணையாக உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிதியுதவி அளித்திடவும்; மாண்புமிகு உள்துறை அமைச்சரே ஒப்புக் கொண்டிருப்பது போல், தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு உரிய ஆட்சி மொழித் தகுதியை மத்திய அரசு அலுவலகங்களில் அளித்திடவும் தேவையான முயற்சிகளை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாகத் தமிழகத்தில் மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத் தமிழ் பாடத்திட்டத்தை அமல்படுத்தவும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.