ஸ்டாலின் விரித்த வலையில் வசமாக சிக்கிய ஈபிஎஸ்...எப்படி தப்ப போகிறார்?

ஸ்டாலின் விரித்த வலையில் வசமாக சிக்கிய ஈபிஎஸ்...எப்படி தப்ப போகிறார்?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது எந்நேரத்திலும் நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேதாந்தா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையிலிருந்து காப்பர் கலந்த வாயு காற்றில் கலந்து அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு  மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்த ஆலையை இழுத்து மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு அப்பகுதி மக்கள் போரட்டம் நடத்தினர். இந்த போராட்டமானது கிட்டத்தட்ட 100 நாளை எட்டியது. சரியாக 100வது நாளன்று, அதாவது கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி, போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கலவரத்தின்போது, பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

டிவியை பார்த்து தெரிந்துக்கொண்டேன்:

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து கருத்து தெரிவித்த அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளை பார்த்து தெரிந்துக்கொண்டதாக பேட்டி அளித்தார். அப்போது, ஈபிஎஸ் அளித்த பேட்டி அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துக்கொண்டு தொலைக்காட்சியை பார்த்து தெரிந்துக்கொண்டேன் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்பது போன்ற கருத்துக்கள் பரவி வந்தது. 

விசாரணை ஆணையம்:

இதையடுத்து அதிமுக ஆட்சிக்காலத்திலேயே இந்த சம்பவம் குறித்து  உடனடியாக விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

இதையும் படிக்க: வேல்முருகனின் கவன ஈர்ப்பு தீர்மானம்...தங்கம் தென்னரசின் பதில் என்ன?

விசாரணை அறிக்கை தாக்கல்:

இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு இந்த ஆணையம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை, தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நொடிக்கு நொடி தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும், ஆனால், எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சி மூலம் தான் தெரிந்து கொண்டதாக தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின் மூலம் ஈபிஎஸ்க்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சாதகமாக்கும் திமுக:

இதனிடையே இந்த விவகாரத்தை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட திமுக, ஈபிஎஸ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜவாஹிருல்லா உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எழுப்பினர்.

ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்றைய தினம் “கடப்பாரையை முழுங்கிவிட்டு கசாயம் குடிச்சிடுவான் எனும் அளவிற்கு பெரிய பொய்யை அவிழ்த்து விட்டார் ஈபிஎஸ். ஆனால், அவர் சொன்னது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை அவர்கள் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே சொல்லிவிட்டது. எனவே, இந்த சம்பத்தில் யார்? யார்? குற்றவாளிகளோ, அவர்கள் கூண்டில் கட்டாயம் ஏற்றப்படுவார்கள்” என முதலமைச்சர் தெரிவித்தார். 

ஈபிஎஸ்க்கு ஏற்பட்ட சிக்கல்:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சம்பந்தபட்டவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முகஸ்டாலின் பேசியதை வைத்து பார்த்தால் ஈபிஎஸ் மீது எந்நேரத்திலும் நடவடிக்கை பாய வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த விவகாரத்தில் ஈபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதிலிருந்து எப்படி தப்பிப்பார் என்பது பற்றிய கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் வட்டமடித்து வருகிறது.