”அந்த அம்மாவின் கட்சியையே ஏலம் விட்டு கொண்டு.....” முதலமைச்சர் ஸ்டாலின்!!!

”அந்த அம்மாவின் கட்சியையே ஏலம் விட்டு கொண்டு.....” முதலமைச்சர் ஸ்டாலின்!!!

தி.மு.க கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பின்வருமாறு....

கேள்வி:  சமீபத்தில் உங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாக எதைப் பார்க்கிறீர்கள்?

பதில்:  தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியாகி இருப்பதுதான் அண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த செய்தி!  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு சந்திரசூட் அவர்கள் இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

 இந்தியாவின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் ஆக வேண்டும் என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தொடக்க காலத்தில் இருந்தே குரல் கொடுத்துக்கொண்டு வருகிறோம்.  சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள் நாங்கள்!  உச்சநீதிமன்றத்தின் கிளை தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்று சொல்கிறவர்கள் நாங்கள்.

இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்!  உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வெளியாகி வருவதை முதல் படியாகவே கருதுகிறேன். மற்ற கோரிக்கைகள் அடுத்தடுத்து நடக்கும் என்று நம்புகிறேன்.

 கேள்வி:   இவ்வளவு நன்றாக சென்று கொண்டிருக்கும்போது, நீதிபதிகளைத் தேர்வு செய்கிற “கொலிஜியம்” அமைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கும், மத்திய சட்ட அமைச்சருக்கும் நடக்கின்ற மோதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 பதில்:  அது ஆரோக்கியமானதாக இல்லை. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் முக்கியமான ஒன்றாக மதிக்கப்படுகிற நீதித்துறையில் அனைத்துச் சமூகங்களின் பிரதிநிதித்துவமும் இடம்பெற வேண்டும் என்பதுதான் நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது.  திராவிட முன்னேற்றக் கழகமும் அதைத்தான் விரும்புகிறது. 

அதற்காக நீதித்துறையின் சுதந்திரத்தில் குறுக்கிடுகிற வகையில், ஒன்றிய அரசின் பிரதிநிதி ஒருவர் நீதிபதிகள் தேர்வுக்குழுவான கொலிஜியத்தில் உறுப்பினராக நியமிப்பது முறை இல்லை.  நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசின் கருத்தைக் கூட மதிக்காத இன்றைய சூழலில், ஒன்றிய அரசின் பிரதிநிதி இடம்பெறுவது, உயர்நீதிமன்றத்தில் மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்திலும் சமூகநீதியின் அடிப்படையிலான நீதிபதி தேர்வு முறைக்கு துளியும் உதவாது என்பதுதான் என்னுடைய கருத்து.

கேள்வி:  ஞாயிற்றுக்கிழமைகூட ஆய்வுப் பணியை மேற்கொள்கிறீர்களே…?

பதில்:  முதலமைச்சருக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை, அலுவலக நேரம் எல்லாம் கிடையாது. இந்த ஆண்டு கனமழை பெய்தபோது, சென்னையில் மக்கள் எந்தப் பாதிப்பும் இல்லாமல் நிம்மதியாக இருந்தார்கள் என்றால், அதற்கு நம்முடைய அரசு முன்கூட்டியே எடுத்த தீவிர நடவடிக்கைகள்தான் காரணம்.  அதில் இன்னும் சில வேலைகள் மீதம் இருக்கிறது என்று அப்போதே சொன்னேன். 

அந்த மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தேன்.  மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளைச் சீரமைக்கிற பணி இப்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.  அதையும் பார்த்தேன்.  கிண்டியில் கட்டப்பட்டு வரும் உயர்தரப் பல்நோக்கு மருத்துவமனைக் கட்டுமானப் பணிகள், அதையும் பார்த்தேன். முதலமைச்சர் என்கிற முறையில், நானே நேரில் ஆய்வுகளை மேற்கொள்கிறபோது, அதிகாரிகள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பெறுவார்கள்.  அதனால், திட்டங்களை நாம் எதிர்பார்ப்பதைவிட வேகமாக நிறைவேற்றி முடிக்கலாம்.  அதனால்தான் கள ஆய்வுக்கு நான் முக்கியத்துவம் தருகிறேன். 

கேள்வி:  இப்போது “கள ஆய்வில் முதலமைச்சர்” என்று ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறீர்களே. இதனுடைய செயல்முறை எப்படி இருக்கும்?

பதில்:  களப்பணி என்பது எனக்கு புதியது இல்லை.  களத்தில் இருந்து வந்தவன் நான்! களப்பணி ஆற்றியே முன்னுக்கு வந்தவன் நான்!  நான் சென்னையின் மேயராக இருந்தபோது, மாநகரத்தின் மேம்பாட்டுக்காகப் பல திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தினோம். 

குறிப்பாக, சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கின்ற வகையில், 9 மேம்பாலங்களைக் கட்டினோம். ஒதுக்கப்பட்ட நிதியில் 30 விழுக்காட்டை மிச்சப்படுத்தினோம். குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே அதைக் கட்டியும் முடித்தோம்.

அதுமாதிரி, நான் துணை முதலமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சித்துறை சார்பாக, ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை, குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே முடித்து, தலைவர் கலைஞருடைய பாராட்டைப் பெற்றோம்.  அந்தத் திட்டத்தால், காலம்காலமாகக் குடிநீர் கிடைக்காமல் வறண்டு கிடந்த ராமநாதபுரம் பூமி, இன்றைக்கு தண்ணீர்ப் பஞ்சம் இல்லாத பகுதியாக மாறி இருக்கிறது.  இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். 

தலைமைச் செயலகத்தில் உட்கார்ந்து திட்டங்களை உருவாக்குகிறோம்.  சட்டமன்றத்தில் அறிவிக்கிறோம்.  நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  இந்தத் திட்டங்கள் எல்லாம் எவ்வளவு வேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று, கோட்டையில் எனது அறையில் உள்ள Dashboard-இல் நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அதோடு, இந்தத் திட்டங்களின் செயல்பாட்டை, நேரில் பார்த்து முடுக்கி விடுவதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல இருக்கிறேன்.

முதலாவதாக பிப்ரவரி 1-ஆம் தேதி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களை விரிவாக ஆய்வு செய்யப் போகிறேன். குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான மக்கள் நலத்திட்டங்கள் இந்த ஆய்வின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.  

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், உயரதிகாரிகளும் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுடனும், கள ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் திட்டச் செயல்பாடுகளை பற்றி விவாதித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

 என்னைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் தொடங்கி, கடைநிலை அரசு ஊழியர் வரைக்கும் ஒரே நோக்கத்துடன் செயல்பட்டால், தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக மாறும்.  அதற்கான செயல்திட்டம்தான் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்கிற இந்தத் திட்டம்.

கேள்வி:  ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் களத்தினுடைய நிலவரம் எவ்வாறு இருக்கிறது?

பதில்:  இந்த இடைத்தேர்தலே ஒரு துயரமான சூழலில்தான் வந்திருக்கிறது.  அந்தத் தொகுதி எம்.எல்.ஏ - தம்பி திருமகன் ஈ.வெ.ரா மறைவு எதிர்பாராதது.  அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வு.  நான் ஈரோட்டுக்கு நேரில் சென்று, அஞ்சலி செலுத்தியபோது, இளங்கோவன் அவர்களின் மனநிலையைப் பார்த்து கலங்கினேன்.  அரசியலில் தந்தை மறைவுக்கு பிறகு மகனுக்கு வாய்ப்பு வருவதைப் பார்த்திருக்கிறோம்.  ஆனால், இங்கு திருமகன் ஈ.வெ.ரா மறைந்து, அவரது தந்தை போட்டியிட வேண்டிய நிலை வந்திருக்கிறது.

இத்தகைய சூழலில், கனத்த இதயத்தோடுதான், ஈவிகேஎஸ் இளங்கோவன் களத்தில் நிற்கிறார்.  எப்படி இருந்தாலும் இது தேர்தல் களம்.  இந்த இடைத்தேர்தலில் தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.  தி.மு.கழக அரசின் சாதனைகளும், நிறைவேற்றி வருகின்ற மக்கள் நலத்திட்டங்களும், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தரும்.  இந்த இடைத்தேர்தலில் மட்டுமல்ல, இனி வரும் எந்தத் தேர்தலிலுமே தி.மு.கழக கூட்டணிதான் வெல்லும் என்பது உறுதி!  

 கேள்வி:  ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த நீங்கள் அவர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளலாமா?  இது பின்வாங்கல் இல்லையா?

 பதில்:  ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படவில்லை.  அன்று அவர் படித்தது அரசின் உரை.  ஆகவே அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை எந்த மாற்றமும் இல்லாமல் அவைக்குறிப்பில் இடம் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய தீர்மானம்!  அத்தீர்மானம் ஏற்கப்பட்டு - அவையின் மாண்பும் மக்களாட்சித் தத்துவமும் நிலைநாட்டப்பட்டது.  

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்குப் பதிலளித்து நான் பேசியபோது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பைக் காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், நூற்றாண்டைக் கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களைப் போற்றவும் நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன்” என்று குறிப்பிட்டேன்.  அதைத்தான் இப்போதும் உங்களுக்கு பதிலாக சொல்ல விரும்புறேன்.  

எனவே, குடியரசு நாள் தேநீர் விருந்து என்பது காலம் காலமாக இருக்கின்ற நடைமுறை மரபு! குடியரசு நாளன்று அதில் பங்கேற்றது மக்களாட்சியின் மாண்பைக் காப்பதற்கான பண்பே தவிர, இதில் அரசியல் பின்வாங்கலும் இல்லை, முன்வாங்கலும் இல்லை, எந்த சமரசமும் இல்லை!

 கேள்வி: பான் மசாலா, குட்கா ஆகிய போதைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடைய உயர்நீதிமன்றம் நீக்கி இருக்கிறதே?

பதில்:  உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும்.  ஏற்கனவே இருக்கிற சட்டங்களின் அடிப்படையிலேயே தொடர் நடவடிக்கைகளை அரசு இப்போதும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.  3 மாதங்களில் 10, 673 வழக்குகள் பதியப்பட்டு, 150 டன் கஞ்சா பறிமுதல், செய்யப்பட்டிருக்கிறது.  

போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களைச் செய்கிறவர்கள் மேல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க, சட்டத்தில் தேவையான திருத்தங்ளைக் கொண்டு வருவதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழ்நாடு அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக, உயர்நீதிமன்றமே பாராட்டி இருக்கிறது.  எனவே, போதைப் பொருட்கள் நடமாட்டத்தை நிச்சயமாக அறவே ஒழிப்போம்.  அது உறுதி! அதற்குப் பொதுமக்களாகிய நீங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளதே?

 பதில்:  சகோதரர் ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை குமரி முனையில் இருந்து நான்தான் தொடங்கி வைத்தேன்.  அது மிகப் பெரிய வெற்றிப் பயணமாக இருக்கும் என்று அன்றைக்கே சொன்னேன்.  இந்தப் பயணத்தில் தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ அவர் பேசவில்லை. 
இந்திய ஒன்றியத்தின் அமைதிக்கு என்றைக்கும் தேவைப்படுகிற மதச்சார்பற்ற கொள்கையைத்தான் பேசி இருக்கிறார்.  அதனால் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, ஒற்றுமைப் பயணத்தை வெற்றியடைய வைத்திருக்கிறது.  அந்த வெற்றியை தடுக்கப் பார்த்தார்கள்.  உரிய பாதுகாப்பு வழங்காமல் அந்தப் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்தப் பார்த்தார்கள்.  அதையெல்லாம் தாண்டி, இந்திய ஒற்றுமைப் பயணத்தின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் சகோதரர் ராகுல்காந்தி அவர்களுக்கு, என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து மிகத் தீவிரமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வருகிறதே?

பதில்:  இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது 318 கோடி ரூபாய்க்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகளைச் செய்தது தமிழ்நாடு அரசு.  குறிப்பாக, உயிர்காக்கும் மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் அனுப்பினோம். 

இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வினைப் பொறுத்தவரை தொடர்ந்து இவ்வாறு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.  தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு இலங்கையில் வாழும் தமிழர்கள் விரும்புகிற வகையில் கிடைக்க வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு.  வரக்கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும், திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.க்கள் இதை வலியுறுத்துவார்கள்.

கேள்வி:  ஊடகங்கள், சமூக ஊடகங்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் தலைவர்களில் நீங்களும் ஒருவர்.  ஊடகங்களின் இன்றைய போக்கைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:  பொதுவாக அன்றாடச் செய்திகளுக்காகச் செய்தித்தாள்களை வாசிப்பதோடு, தொலைக்காட்சிகளையும் தொடர்ந்து பார்ப்பேன்.  டி.வி. மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களையும் தொடர்ந்து கவனிப்பேன்.  அவற்றில் வரும் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளை உடனடியாகத் தொடர்பு கொண்டு, தீர்வு காணச் சொல்வது என்னுடைய வழக்கம். ஆனால், சில ஊடகங்கள் பிரச்சினையை ஒளிபரப்புகிறார்கள்.  

அதைப் பார்த்துவிட்டு உடனே நடவடிக்கை எடுக்கிறோம்.  பிரச்சினையை ஒளிபரப்புகிற ஊடகங்கள், அது தொடர்பாக எடுத்த நடவடிக்கையை வெளிப்படுத்துவதே இல்லை. சில நேரங்களில் காலையில் ஒரு பிரச்சினை பற்றி செய்தி போட்டார்கள் என்றால், அதற்குப் பிற்பகலுக்குள் தீர்வு காணப்பட்டிருக்கும். ஆனாலும், இரவு வரைக்கும் அந்த செய்தியை ’அப்டேட்’ செய்வதில்லை.  பிரச்சினைகளைப் பிரசுரிக்கிற சில செய்தித்தாள்களும்கூட, மறுநாள் அதுகுறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியோ, அரசு அளித்த விளக்கத்தையோ முறையாகப் போடுவதே இல்லை.  இனியாவது அத்தகைய போக்கை அவர்கள் மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி:  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை பெங்களூரில் ஏலம் விடுகிறார்களே?

பதில்:  இங்கு சிலர் அவருடைய கட்சியையே ஏலம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்!

-நப்பசலையார்

இதையும் படிக்க:   எதுக்கு வந்திருகீங்க? யாருக்கு தெரியும்...கட்டாயப்படுத்தி கருத்து கணிப்பு கூட்டத்திற்கு அழைத்து வந்த கட்சியினர்...!