சென்னை அண்ணாநகரில் ஒரு கோடி ரூபாய் கொள்ளை...!!

சென்னை அண்ணாநகரில் ஒரு கோடி ரூபாய் கொள்ளை...!!

சென்னையில் நகைக்கடை பணியாளர்களிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகையை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

கொள்ளை:

சென்னை நொளம்பூர் பகுதியில் தலைமை இடமாகக் கொண்டு இயக்கி வருகிறது ஏ ஆர் டி நகைக்கடை.  இந்த  நகை கடையில் பணிபுரிந்து வரக்கூடிய ஆசிக் மற்றும் அந்தோணி ஆகிய இருவரும் என் எஸ் சி போஸ் சாலையில் இருந்து மூன்று கிலோ தங்க நகைகளை வாங்கிக் கொண்டு ola காரில் அண்ணா நகர் ரவுண்டானா அருகே தோழியுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது வெள்ளை நிற சொகுசு காரில் வந்த இரண்டு பேர் கொண்ட கும்பல் காரில் மூவரையும் கடத்தியதாகவும் அந்த பெண் தோழியை வாவினிலும் மற்ற இருவரை தாக்கி நகைகளை பறித்துக் கொண்டு நொளம்பூர் பைபாஸ் சாலையில் இறக்கிவிட்டு சென்றதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த நகைக்கடையின் பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

புகார்:

காவல் கட்டுப்பாட்டு அறையில் தகவல் தெரிவிக்க சம்பவம் நடைபெற்ற இடம் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து நகை கடையின் பணியாளர் ஆசிப் மற்றும் அந்தோணி ஆகிய இருவரும் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை கொடுத்துள்ளனர்.

விசாரணை:

புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நொளம்பூரில் செயல்பட்டு வரக்கூடிய ஏ ஆர் டி நகைக்கடையில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் விகிதம் 4 வாரத்திற்கு 12 ஆயிரம் வட்டியாக தருவதாக கூறியதாகவும் கடந்த ஒரு வார காலமாக பணத்தை முறையாக முதலீட்டாளர்களுக்கு வழங்காமல் இருந்ததும் தெரிய வந்தது.

முதலீடு செய்தவர்:

மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நகைக்கடையில் முதலீடு செய்த ஒரு நபர் மூலமாக 30க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். ஒரு வாரம் கடந்தும் முதலீட்டிற்கான வட்டி எதுவும் கொடுக்காமல் இருந்த காரணத்தினால் அந்த நபர் நகைகளை கொண்டு சென்றதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

பதிவு செய்யப்படாத வழக்கு:

இதனை தொடர்ந்து போலீசார் மேலும் மேற்கொண்ட விசாரணையில் முதலீட்டுத் தொகையை திருப்பி தராத காரணத்தினால் நகை கடை ஊழியர்கள் கொண்டு சென்ற ஒரு கோடி மதிப்புடைய தங்க நகைகளை முதலீட்டாளர்கள் கொண்டு சென்றதும் தெரிய வந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் காவல்துறை  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:   சைத்ர நவராத்திரி 7-ம் நாள் சிறப்பு வழிபாடு