ஜனவரி 31 தான் இறுதி...அதுக்கு மேல் கிடையாது...எச்சரித்த செந்தில் பாலாஜி!

ஜனவரி 31 தான் இறுதி...அதுக்கு மேல் கிடையாது...எச்சரித்த செந்தில் பாலாஜி!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

ஆதார் எண் இணைப்பு:

சமீபத்தில் தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், 100 யூனிட் மின்சார மானியத்தைப் பெற ஆதார் எண் இணைப்பு அவசியம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்தது. அதற்கு காரணம், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, யார் யாருக்கு மானியம் சென்றடைகிறது என்பது குறித்த தரவுகளைப் பராமரிக்கவே ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு முகாம்:

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன். எனவே,  இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டு, அதற்காக நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் சேர்ந்து வெளியிட்டது.

இதையும் படிக்க: மின் கட்டண உயர்வுக்கு யார் காரணம் தெரியுமா? அமைச்சர் பகீர்!

காலக்கெடு நீட்டிக்கப்படுமா?:

அதன்படி,  தமிழக அரசு நடத்தும் சிறப்பு முகாம்கள் மூலம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் மின் இணைப்பு  எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி, அதாவது இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், இன்னும் 1 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் இது குறித்த ஆலோசனைகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

கால அவகாசம் நீட்டிப்பு:

இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாத காலம் நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால நீட்டிப்பு கோரிக்கையை ஏற்று, மேலும் ஒரு மாதம் காலம் நீட்டித்து அடுத்த ஜனவரி 31 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

கால நீட்டிப்பு செய்யப்படாது:

தொடர்ந்து, ஜனவரி 31 க்கு பிறகு மீண்டும் கால நீட்டிப்பு இருக்கும் என்ற நிலையில் இருந்துவிட வேண்டாம் என்று எச்சரித்த அமைச்சர், ஜனவரி 31 க்கு மேல் கால நீட்டிப்பு செய்யப்படாது என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவாக கூறியுள்ளார்.