தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதா? - சிபிஎம் பாலகிருஷ்ணன்
தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைக்கு எதிராக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தொடர்ந்து பேசி வருகிறார் என சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டப்படும் என்றும், அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்பெண்ணை தீர்ப்பாயம் அமைக்கும் விவகாரத்தில் டி.கே.சிவகுமார் பேசியது கடும் கண்டனத்திற்குரியது எனவும், நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்ட பிரச்சனைகளில் புதிதாக குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியை கர்நாடக அரசு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : மணிப்பூரில் திடீரென ஏற்பட்ட புதிய கலவரம்...3 பேர் உயிரிழந்த பரிதாபம்!
தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைக்கு எதிராக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தொடர்ந்து பேசி வருவதாகவும், கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது விவகாரம் குறித்து இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த ஆலோசனைக்கு பிறகு, டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் மேகதாது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.