முதலமைச்சரின் நாளைய டெல்லி பயணம்...பிரதமரை சந்திப்பாரா? மாட்டாரா?

முதலமைச்சரின் நாளைய டெல்லி பயணம்...பிரதமரை சந்திப்பாரா? மாட்டாரா?

இந்தியா தலைமை ஏற்றுள்ள ஜி 20 உச்சி மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்ல இருக்கிறார். 

ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம்:

அண்மையில் இந்தோனேசியாவில் ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிசி சுனக் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த மாநாட்டின் முடிவில், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி20 நாடுகளின் மாநாடு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

டெல்லி செல்லும் முதலமைச்சர்:

இந்நிலையில் ”ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம்” என்ற கருப்பொருளின் படி ஜி 20 மாநாட்டை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 32 பிரிவுகளில் 200 கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டில் ஜி20 மாநாட்டில் செயல்படவேண்டிய கூட்டு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும்  கூட்டம் நாளை டிசம்பர் 5 ம் தேதி டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற இருக்கிறது.

இதற்காக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக கட்சி தலைவருமான முக ஸ்டாலின், மத்திய அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்.

இதையும் படிக்க: முதலமைச்சரின் டெல்லி பயணம்...அரசியலில் ஏற்படுத்திய பரபரப்பு!

தனிப்பட்ட முறையில் சந்திப்பு:

இந்த பயணத்தின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்தித்து, தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளையும் முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்திக்க மாட்டார் எனத் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பயணத்தின் முடிவில் தான் ஸ்டாலின் பிரதமரை சந்திக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவரும் என அரசியல் அரங்கில் கருத்துக்கள் நிலவி வருகிறது.