கரையை கடந்த மாண்டஸ்...இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!

கரையை கடந்த மாண்டஸ்...இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!

மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையிலும், இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரையை கடந்த மாண்டஸ்:

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘மாண்டஸ் புயல்’, 8 ஆம் தேதி மாலை தீவிர புயலாக வலுப்பெற்று  மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று(09.12.2022) காலை 08.30 மணி அளவில் புயலாக வலு குறைந்து காரைக்காலுக்கு 180 கி.மீ. கிழக்கு வட கிழக்கே மற்றும் சென்னைக்கு 260 கி.மீ. தென் - தென்கிழக்கே நிலைகொண்டிருந்தது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் - –புதுவை  தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரத்திற்கு  அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து புயலானது, நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. 

இதையும் படிக்க: மாண்டஸ் புயலின் நிலை என்ன...? வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது...?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

கரையை கடந்த புயல் வட தமிழகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக, மாமலாபுரத்திலிருந்து வடமேற்கே சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் மற்றும் சென்னைக்கு மேற்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

தாழ்வுப் பகுதியாக வலுவிழக்க வாய்ப்பு:

புயலானது இன்று மாலை மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் புயல் கரையை கடந்த நிலையிலும், இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.