தொடரும் பிராங்க் வீடியோ அட்டூழியம்.. யூடியூப் சேனல்களுக்கு காவல்துறை எச்சரிகை

பிராங்க் வீடியோக்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

தொடரும் பிராங்க் வீடியோ அட்டூழியம்.. யூடியூப் சேனல்களுக்கு காவல்துறை எச்சரிகை

5 யூடியூப் சேனல்கள் மீது புகார்

சென்னையைச் சேர்ந்த ரோகித் குமார் என்ற வாலிபர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும், கட்டெரும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய்மணிவேல், நாகை 360 ஆகிய 5 யூடியூப் சேனல்கள் மீது சென்னை மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . குறிப்பாக இரண்டு யூடியூப் சேனல்களின் உரிமையாளர்கள் அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு கடிதம்

அப்போது சம்மனுக்கு ஆஜரான இரண்டு யூடியூப் சேனல் உரிமையாளர்களை அழைத்து யூடியூப் சேனல்கள் மூலம் வீடியோக்கள் வெளியிடுவது தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் வழங்கி எச்சரித்து அனுப்பப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் பிராங்க் வீடியோக்கள் வெளியிட மாட்டோம் என காவல்துறைக்கு கடிதம் எழுதியும் கொடுத்துள்ளனர். 


சட்டபூர்வ நடவடிக்கை

குற்றம் சாட்டப்பட்ட மற்ற யூடியூப் சேனல்களையும் இதேபோன்று விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இனி வரும் காலங்களில் பிராங்க் வீடியோவால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என உறுதியளித்துள்ளதாக புகார்தாரரான ரோகித் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆபாசமாகவும் பகைமையை வளர்க்கும் வகையிலும் இரண்டு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் ஜாதி மற்றும் மத, இன ரீதியாகவும் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தியும், பிறப்பு, தங்கும் இடம், மொழி உள்ளிட்ட விவாகரங்களை வெளிப்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோ வெளியிட்டால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என யூடியூப் சேனல்களுக்கு சென்னை காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது. 


பொறுப்புத் துறப்பு வாசகம்

யூடியூப் சேனல்கள், பொதுமக்கள் பாதிக்காத வகையில் தங்களுக்குத் தெரிந்த நபர்கள் மூலம் விதிகளை மீறாமல் வீடியோ எடுத்து வெளியிடலாம் என தெரிவித்துள்ளது. மேலும் பிராங்க் வீடியோக்கள் எடுக்கப்படும் பொதுமக்களிடமும் உரிய விளக்கத்தை கொடுத்து வீடியோ எடுக்கலாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் யூடியூப் சேனல் நடத்துபவர்கள், இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நடிகர்கள், திட்டமிட்டு எழுதி இயக்கப்பட்ட வீடியோ யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல போன்ற பொறுப்புத் துறப்பு வாசகம் வீடியோவில் இடம் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: புரூஸ் லீயின் மரணத்தில் 42 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மர்மம்..!

காவல்துறை எச்சரிக்கை

இதனை மீறி பிராங்க் வீடியோக்கள் எடுக்கப்படுவதன் மூலம் அதை பொதுமக்கள் பார்க்கப்படும் பட்சத்தில் தாங்களும் இதுபோன்று பிராங்க் செய்யப்பட்டுவிடுவோமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும். அவ்வாறு பொதுமக்கள் பாதிக்கும் வகையிலும், அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பிராங்க் வீடியோக்கள் வெளியிடப்பட்டு அதனால் பாதிக்கப்படும் நபர்கள் உடனடியாக புகார் அளிக்கலாம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

புகார் அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மீது வீடியோவின் தன்மைக்கு ஏற்ப சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.