தீபாவளி முன்பணம் கோரி மலையகத் தொழிலாளர்கள் போராட்டம்!

முன்பணமாக ரூபாய் 15,000 ஆயிரம் தருவதாக தேயிலை நிறுவனங்கள் அறிவித்திருந்தது.

தீபாவளி முன்பணம் கோரி மலையகத் தொழிலாளர்கள் போராட்டம்!

இலங்கையின் மலையகப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களைச் சார்ந்து பல லட்சம் தமிழர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் மலையகத் தமிழர் என அழைக்கப்படுகின்றனர். தீபாவளி பண்டிகையொட்டி தமக்கு தர வேண்டிய முன்பணத்திற்காக போராடி வருகின்றனர்.

தொழிலாளர் போராட்டம்

தீபாவளி முன்பணமாக ரூபாய் 15,000 ஆயிரம் தருவதாக தேயிலை நிறுவனங்கள் அறிவித்திருந்தது. ஆனால் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் அல்லது பத்தாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் முற்பணம் தருவதாக நேற்று அறிவித்தது. இதையடுத்து இத்தோட்டத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க : ரணில் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவார்...அமெரிக்கா சொல்வது உண்மையா? 

முன்பணம் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளப்படும்

சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுப்பட்டதோடு, மீண்டும் தொழிலுக்கு செல்லாமல் தொழிலாளர்கள் வீடுகளுக்கு திரும்பினர். இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், தாம் முறையாக வேலை செய்ததாகவும், தற்போது எமக்கு வழங்கப்படும் முன்பணம் மாத சம்பளத்தில் பிடிக்கப்படும். அதேவேளை பெருந்தோட்ட கம்பனி 15 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியிருந்த போதிலும் இதனை தோட்ட நிர்வாகம் வழங்க முடியாது என கூறுவது எவ்விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்.

மேலும் படிக்க : அவர்கள் தான் இலங்கை அதிபரை இயக்குகிறார்கள்...நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!

அறிவித்த பணத்தை வழங்க கோரிக்கை

இதனாலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர். விலைவாசி அதிகரிப்பு பொருளாதார பிரச்சனைகள் இருக்கும் போது எவ்வாறு தீபாவளியை கொண்டாட முடியும். எனவே தோட்ட நிர்வாகம் உடனடியாக தீபாவளி முற்பணத்தை முறையாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தாம் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்போம் என தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு எச்சரித்துள்ளனர்.