பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கி சூடு... சக மாணவர்கள் 3 பேர் பலி...
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் சக மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 15 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். இதில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
துப்பாக்கி குண்டுகள் துளைத்ததில் 8 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 6 பேர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் இருவர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவனை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருவது குறிப்பிடதக்கது.