பல தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்... பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி...

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வர வேண்டும் என இம்மானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பல தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்... பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி...

இந்தியா உள்பட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு, இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வருகிறது. இத்தாலி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்திய பிரதமர் மோடி உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் இடையே, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், துருக்கி அதிபர் எர்டோகன் உள்பட பல தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து, பிரதமர் மோடி பேசியுள்ளார். இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, சுற்றுச்சூழல், சுகாதாரம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர். அப்போது இந்தியா வர வேண்டும் என, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தமது நண்பரான அதிபர் இம்மானுவேல் மேக்ரானை ரோம் நகரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.