உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த இலக்கு... 1.5 டிகிரி செல்சியசாக குறைக்க ஒப்புதல்...
பாரீஸ் பருவநிலை மாநாட்டின் ஒப்பந்தத்தின்படி, வரும் 2030-ம் ஆண்டுக்குள் உலக வெப்பமயமாதலை ஒன்றரை டிகிரி செல்சியசாக கட்டுப்படுத்த வேண்டும் என, ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
பொருளாதாரத்தில் 80 சதவீத பங்களிப்பை கொண்ட 20 வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அடங்கிய ஜி20 கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு, இத்தாலி தலைநகர் ரோமில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், கடந்த 2015-ம் ஆண்டு பாரீஸ் பருவநிலை மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, வரும் 2030-ம் ஆண்டுக்குள் உலக வெப்பமயமாதலை பாதியாக குறைக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
அதாவது ஒன்றரை டிகிரி செல்சியசாக கட்டுப்படுத்த வேண்டும் என ஒப்புக்கொண்டுள்ளனர். 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ய நிலைக்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்கவும் உறுதி அளித்துள்ளனர்.
கார்பன் உமிழ்வுக்கு முக்கிய காரணமே நிலக்கரி பயன்பாடுதான் என்றும், எனவே, மின் உற்பத்திக்கு முக்கிய எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் எனவும், ஜி20 மாநாட்டில் உலக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், நிலக்கரி தொடர்பான திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து ஜி20 மாநாடு நிறைவு பெற்றது.