இறந்து விட்டதாக அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு...! அதிர்ச்சியில் கிராம மக்கள்!!

இறந்து விட்டதாக நினைத்து அடக்கம் செய்யப்பட்ட நபர் திடீர் என்று உயிருடன் வந்த சம்பவம் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது.

இறந்து விட்டதாக  அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு...! அதிர்ச்சியில் கிராம மக்கள்!!

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே துறையம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு கார்த்தி மற்றும் பிரபுகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரும்பு வெட்டும் வேலைக்காக சென்ற மூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மகன்கள் 2 பேரும் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 31-ஆம் தேதி மூர்த்தியின் மகன் கார்த்தியின் வாட்ஸ் அப்பிற்கு வந்த தகவலின் பேரில் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திற்கு சென்று பார்த்த போது, முகம் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இருந்தாலும் அவரது தந்தையை போன்ற தோற்றத்துடன் இருந்ததால், இறந்து கிடப்பது தனது தந்தை தான் என்று முடிவு செய்து, அங்கிருந்து சடலத்தை மீட்டு உரிய முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்தார்.

பின்னர் இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி நேற்று இரவு உயிருடன் வீடு திரும்பியுள்ளார். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் அனைவரும்  அதிர்ச்சியடைந்தனர். அதேசமயம் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக மூர்த்தி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்த தகவல் அப்பகுதியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் தற்போது அடக்கம் செய்யப்பட்ட அந்த நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளதால் அடையாளம் தெரியாத அந்த நபரின் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.