சாலை மறியல் முடிந்தும் நகராத பேருந்து- போலீசார் தள்ளிவிட்ட காட்சி வைரல்

சீர்காழி அருகே சாலை மறியலில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து சாலை மறியல் முடிந்தும் இயங்காததால் போலீசார் உதவியுடன் தள்ளிச் சென்ற காட்சிகள்  சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

சாலை மறியல் முடிந்தும் நகராத பேருந்து- போலீசார் தள்ளிவிட்ட காட்சி வைரல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குளங்கரை பகுதியில் இன்று காலை மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சீர்காழி கச்சேரி சாலையில் அமர்ந்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சிதம்பரம் -சீர்காழி வழியாக மயிலாடுதுறை நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில்  நீண்ட நேரம் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சாலையின் இருபுறமும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் பெருந்தோட்டம் செல்ல வேண்டிய அரசு பேருந்து திடீரென இயங்காததால் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த பாதுகாப்பிற்கு வந்திருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து இயங்காத பேருந்தை தள்ளி விட்டனர் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.