தாய்மையுணர்வுடன் செயல்பட்ட செல்லபிராணி!!நெகிழ்ச்சியூட்டும் புகைப்படம்...

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய் வைரலாகும் புகைப்படம்...

தாய்மையுணர்வுடன் செயல்பட்ட செல்லபிராணி!!நெகிழ்ச்சியூட்டும் புகைப்படம்...

கோவில்பட்டி அருகே ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாயின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றும் இவர்  தனது வீட்டில் கிட்டியம்மாள் என்ற பெண் நாய் ஒன்றை  பாசத்துடன் வளர்த்து வருகிறார். 

பொதுவாக, செல்ல பிராணிகளை குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே நினைத்து வளர்ப்பது நல்ல விஷயம். அப்படி தான் பெருமாள்சாமியும் கிட்டியம்மாளை தனது குடும்பத்தில் ஒருத்தியாக  வளர்த்து வருகிறார்.  சமீபத்தில், கிட்டியம்மாள்  போட்ட 6 குட்டிகளை அவர் தனது நண்பர்களுக்கு கொடுத்து விட்டார்.

இதற்கிடையே, தென்காசி அருகே உள்ள மேலப்பாவூரில் பெருமாள்சாமியின் மூத்த மகள் இலக்கியா வீடு உள்ளது. அங்கு வளரும் ஆடு  ஒன்று, 4 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டியை இலக்கியா, தனது தந்தை பெருமாள்சாமியிடம் கொடுத்துள்ளார். அந்த ஆட்டுக்குட்டி கருப்பாயி என்று பெயர் வைத்து அவரது வீட்டில் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், அந்த ஆட்டுக்குட்டி வீட்டிற்கு வந்தது முதல், நாயும் பாசத்துடன் பழகியுள்ளது. நாயிடம் இருந்து அதன் குட்டிகளை பிரித்ததால் ஆட்டுக்குட்டிக்கு பசி எடுக்கும் போதெல்லாம், நாய் தாய்மையுணர்வுடன்  பால் கொடுத்து வருகிறது. இதனைப் பார்த்த பெருமாள்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர். இது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியதால் அந்த காட்சியை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து பெருமாள்சாமி கூறுகையில், ‘நாய் பால் கொடுப்பதால் ஆட்டுக்குட்டிக்கு வேறு எதுவும் பிரச்சினை வருமா? என்று அச்சப்பட்டோம். இதுகுறித்து கால்நடை மருத்துவரிடம் கேட்டபோது, பிரச்சினை எதுவும் இருக்காது என்று தெரிவித்ததாக, கூறினார்.