நரகத்தில் கூட இடம் கிடைக்காது - குஷ்பு ஷேர் செய்த வைரல் வீடியோ!

நரகத்தில் கூட இடம் கிடைக்காது - குஷ்பு ஷேர் செய்த வைரல் வீடியோ!

இணையத்தளத்தில் தினமும் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன, சிந்திக்க வைக்கின்றன, ஆச்சரியப்பட வைக்கின்றன, அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.

ஆனால் சில வீடியோக்கள் மட்டுமே நெகிழ வைக்கும். அப்படி மனிதம் போற்றும் வகையில் ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலையோர காய்கறி விற்கும் வயதான பாட்டி ஒருவர் தான் மதிய உணவிற்காக எடுத்து வந்த லஞ்ச் பாக்ஸை ஒரு கையில் எடுத்துக்கொண்டு இன்னொரு கையால் பக்கத்தில் உள்ள கம்பியை பிடித்து மெதுவாக நடந்து வருகிறார். 

சாப்பிட அமரும் முன் கையில் இருந்த லஞ்ச் பாக்ஸ் தவறி விழுகிறது. தவறி விழுந்த பாக்சில் இருந்து உணவு வெளியே சிதறிக் கிடக்கிறது. அதனை பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் வருந்திக்கொண்டிருக்கிறார் பாட்டி. அப்போது சாலையின் மறுபுறத்தில் இருந்து நடக்கும் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஐந்து அல்லது ஆறு வயது மதிக்கத்தக்க பள்ளி சீருடை அணிந்த சிறுவன் சாலையை கடந்து வந்து பாட்டியின் அருகில் நின்று தன் பேக்கை திறக்கிறான்.

அப்போது அந்த பாட்டி கீழே கொட்டியிருக்கும் உணவை எடுக்க முற்படுகிறார். அவரை தடுத்து நிறுத்தி தனக்காக வைத்திருக்கும் உணவை எடுத்து அந்த பாட்டிக்கு கொடுக்கிறான்.

இந்த வைரல் வீடியோவை ஷேர் செய்த நடிகை குஷ்பு, "அம்மாக்களை இதுபோன்று விடும் மக்கள் யாருக்கும் நரகத்தில் கூட இடம் கிடைக்காது, இது நிச்சயம் உங்கள் இதயத்தை உடைக்கும், அந்த குழந்தையை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.