
சென்னை குரோம்பேட்டை சிஎஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் ஹானஸ்ட்ராஜ்(30). இவர் மீது பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி , திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஹானஸ்ட்ராஜின் மனைவி விஜியா உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இன்று ஹான்ட்ராஜின் தந்தை முனிவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மருமகள் விஜயாவை பார்க்க வந்துள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காததால் இருதரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டதை அடுத்து உடனே மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த உதவி ஆய்வாளர் ஒருவர் மதுபோதையில் இருந்த முனிவேலை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹானஸ்ட்ராஜ் சுமார் 6.30 மணிக்கு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கோரி புகார் அளிக்க வந்தார். அங்கு ஆணையர் அலுவக 1 வது நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் தகராறில் ஈடுபட்ட ஹானஸ்ட்ராஜ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் கழுத்து,இரு கைகளை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ந்து போன காவலர்கள் உடனே வேப்பேரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த போலீஸார் ஹானஸ்ட்ராஜ்சை மீட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வேப்பேரி போலீஸார் விசாரணை நடத்தி்வருகின்றனர்.
.