விஜய்க்கு அபராதம் விதித்த தீர்ப்பு... இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்...

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விஜய்க்கு அபராதம் விதித்த தீர்ப்பு... இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்...
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. 
 
இதையடுத்து,  காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை  விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார்.
 
மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா  நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். 
 
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு மனுவில்,  அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது
 
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரனைக்கு வந்தபோது, விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாரயணன், நடிகர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தனி நீதிபதியின் உத்தரவு உள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நடிகர் விஜய் மீது மட்டும் தேவையற்ற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல என தெரிவிக்கபட்டது. வரி விதிப்பை எதிர்க்கவில்லை என்றும் வரி செலுத்த தயாராக இருப்பதாகவும், தனி நீதிபதி தன்னை தேச விரோதியாக முத்திரை குத்தியுள்ளதால் இந்த கருத்துகளை நீக்க வேண்டும் என விஜய் தரப்பில் தெரிவிக்கபட்டது.
 
விமர்சனம் மற்றும் அபராதம் குறித்து நாங்கள் தெரிவிக்க ஏதும் இல்லை என்றும் நுழைவு வரியை கணக்கிட்டு கூறுவதாகவும் அதன்படி  2012 கணக்கீட்டின் படி 20% ஏற்கனவே செலுத்தியுள்ளது போக மீதத்தை செலுத்தினால் போதும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கபட்டது.
 
இதையடுத்து நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், வணிக வரித்துறை வரித் தொகையை ஒரு வாரத்தில் கணக்கிட்டு, செலுத்திய நுழைவு வரி 20 சதவீதம் போக, மீதமுள்ள 80 சதவீதத்தை ஒரு வாரத்திற்குள் நடிகர் விஜய் செலுத்த செலான் பிறபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 
 
பின்னர் மேல் முறையீட்டு மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.