குற்றவாளியின் கையை வெட்ட வேண்டாம் கட்சியில் இருந்தாவது நீக்குவீங்களா அண்ணாமலை அவர்களே?

தி.மு.க தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை மற்றும் குஷ்புவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி சூர்யா:
திமுக எம்பி சிவாவின் மகனான திருச்சி சிவா, திமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் திருச்சி சூர்யா. பாஜகவில் இணைந்த பின் திமுக நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். சில நேரங்களில் கடுமையான் விமர்சனம் வைக்கும் இவருக்கு திமுக நிர்வாகிகள் இவருக்கு பெரிதாக பதில் அளிக்கவில்லை.
வெளியான ஆடியோ:
ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா மற்றும் பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறி ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதிகாரபூர்வமற்ற அந்த ஆடியோவில் பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் தனது துறைக்கு கீழே கமிட்டி உருவாக்குவதற்கு திருச்சி சூர்யா எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது.
யாரிடம் வேண்டுமானால் போ:
சென்னையை சேர்ந்த மருத்துவரான டெய்சி சமீபத்தில்தான் பாஜகவில் சேர்ந்து பதவி பெற்றார். அந்த அதிகாரப்பூர்வமற்ற அடியோவில், டெய்சியை நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது. உன்னை தீர்த்துடுவேன் என்று சொல்வதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சூர்யா பேசியதாக கூறப்படுகிறது. சூர்யாவின் இந்த ஆடியோ இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆடியோ தொடர்பாக அவரும் இதுவரை மறுப்பு எதுவும் வெளியிடவில்லை.
திமுக vs அண்ணாமலை:
திமுக நிர்வாகிகள் பெண்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதோடு பாஜக மகளிர் அணியும் திமுக நிர்வாகிகளுக்கு எதிராக போராட்டமும் நடத்தினர். இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த ஒரு நிர்வாகி தற்போது ஒரு பெண்ணை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளதற்கு காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள்:
புகார் எழுந்தபோது என்ன நடந்தது? நான் கோபமாக இருக்கிறேன். களப்பணி இல்லாமல் சிலர் ஜல்ட்ரா மட்டும் செய்தால் இதுதான் நடக்கும். திருச்சி சூர்யா & கோ அல்லது செல்வா & கோ மீண்டும் எங்களை ட்ரோல் செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். சைக்கோ மூளையால் மட்டுமே முடியும். என் இரத்தம் கொதிக்கிறது. கட்சியை குறை சொல்ல வேண்டாம் என அனைவரையும் தாழ்மையான வேண்டுகோள். திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மை சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன்.. இந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு, என்று கடுமையாக காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
ராஜீவ் காந்தி கேள்வி:
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள தி.மு.க தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, பெண்களை தவறாக பேசிய திருச்சி சூர்யா என்கிற குற்றவாளியின் கையை வெட்ட வேண்டாம் கட்சியில் இருந்தாவது நீக்குவீங்களா அண்ணாமலை அவர்களே? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.