தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மழை நீடிக்கும்!

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மழை நீடிக்கும்!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வரும் 10 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடும் என  தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், வரும் 10 ஆம் தேதி வரை, மீனவர்கள் யாரும் கடல்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.