புதுச்சேரியில் நாளை சமூக நல்லிணக்கப் பேரணி!

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சார்பில் மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

புதுச்சேரியில் நாளை சமூக நல்லிணக்கப் பேரணி!

மத நல்லிணக்கத்தை பலப்படுத்தும் வகையில் காந்தி ஜெயந்தி தினமான நாளை மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் மனிதசங்கிலி இயக்கம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

மத நல்லிணக்கத்தை பலப்படுத்த கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ சம்பத், காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன், மதிமுக, விசிக, திராவிடர் விடுதலைக் கழகம், மாணவர் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மத நல்லிணக்கத்தை பலப்படுத்தும் வகையில் நாளை காலை 9:30 மணி முதல் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சார்பில் மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

புதுச்சேரியில் பேரணிக்கு அனுமதியா?

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம், தமிழகத்தில் நாளைய தினம் நடக்கக்கூடிய ஆர். எஸ். எஸ். அணிவகுப்புக்கு அனுமதி தரவில்லை என்றும், அதையும் தாண்டி நெருக்கடிகள் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் புதுச்சேரியிலே நாளைய தினம் மாலை ஆர். எஸ். எஸ் அணிவகுப்பு இங்கே நடத்த திட்டமிட்டு இங்கு இருக்கக்கூடிய அரசு அனுமதி கொடுத்துவிட்டார்கள். இந்த நிலையில் புதுச்சேரியிலும் மக்களிடத்திலே சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்காக மனித சங்கிலி போராட்டம் நாளை நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறோம். 

கூட்டணி கட்சிகள் பேரணி

இங்கே பாஜக ஆட்சியில் அமர்ந்துவிட்ட பிறகு, மக்கள் அமைதியாக வாழக்கூடிய புதுச்சேரி மண்ணிலே, மதவெறி சக்திகளுக்கு இடம் கொடுக்கின்ற வகையிலும், தீய எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடிய வகையில் இங்கு இருக்கக்கூடிய பாஜக அமைச்சர்கள் குறிப்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பகிரங்கமாக அந்த நடவடிக்கையில் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

ஆர். எஸ். எஸ். அணிவகுப்புக்கு அனுமதியை முறியடித்து மக்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தை காப்பதற்கும், புதுச்சேரி அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்பதற்காக மதசார்பற்ற கொள்கையிலே நம்பிக்கை உள்ள கட்சியில் ஒன்றிணைந்து நாளை தினம் காலை 9.30 மணி முதல் அண்ணா சிலையிலிருந்து காமராஜர் சிலை வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளதாக கூறினார். மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினரின் மனித சங்கிலி இயக்கத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.