தூத்துக்குடி மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல்…போலிஸ் குவிப்பு!
திருச்செந்தூரில் கோவில் கொடை விழாவில் இரு பிரிவனரிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல். ஒருவருக்கு அரிவாள் வெட்டு. கல்வீசி தாக்கியதில் காவல்துறையினர் உட்பட ஏராளமானோர் காயமடைந்த சம்பவத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளை சந்தன மாரியம்மன் கோவில் கொடை திருவிழா முளைப்பாரி ஊர்வலதின் போது கடந்த 10- ம் தேதி இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் இரதப்பினரிடையே சமாதானம் செய்து வைத்தனர். இந்தநிலையில் நேற்று இரவு கரம்பவிளையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த போது மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கரம்பவிளை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆட்டோ , 10 இருசக்கர வாகனங்கள், காவல்துறையினரின் வாகனங்கள், மற்றும் குடியிருப்புகள் அடித்து நொறுக்கப்பட்டது.
மேலும் இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டதில் காவல்துறையினர் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இதில் பாதுகாப்பு பணியிலிருந்த ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில், திருச்செந்தூர் மகளிர் காவல் நிலைய உதவியாளர் மேரி மற்றும் சாத்தான்குளம் டிஎஸ்பி அருண் பாதுகாவலர் பால்பாண்டி உட்பட 4 காவல்துறையினரும் கரம்பவிளையை சேர்ந்த மணிகண்டன் , அன்புச்செல்வம், காட்டுராஜா, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கல்வீச்சில் காயம் அடைந்தனர். இதில் மணிகண்டனுக்கு தலையில் அரிவாளால் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் மோதலின் போது பெட்டோல் குண்டு வீசியதில் மாட்டுக்கொட்டகை தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அப்பகுதிகளில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பாலாஜி சரவணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் திருச்செந்தூர் நகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்
திருச்செந்தூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் உட்கோட்டத்திற்குட்பட்ட 14 அரசு மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.