பெரம்பலூரில் மக்கள் திடீர் சாலை மறியல்!
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட சங்குப்பேட்டை பகுதியில், இன்று காலை அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு, குடிநீர் வழங்க கோரி காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மாதமாக குடிநீர் விநியோகிப்பதில்லை
கடந்த சுமார் ஒரு மாதம் நாட்களுக்கு மேலாக காவிரி குடிநீர் முறையாக தங்கள் பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படவில்லை என்றும், அதிகரிகளிடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதனால், அவ்வழியாக துறையூர், ஆத்தூர் மற்றும் புதிய - பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் மறித்து நிறுத்தப்பட்டது. இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பள்ளி வாகனங்கள், வழித்தட பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்கள் நெடுநேரம் அணிவகுத்து நின்றனர்.
போராடியவர்களை காவல்துறை அவமதிப்பு
இது குறித்து, தகவல் அறிந்த போக்குவரத்து மற்றும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நடந்து கொண்டிருந்த போராட்டத்தின் போது சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி பாண்டியன், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை ஒருமையில் பேசியதோடு, இழுத்ததால் அங்கிருந்தவர்கள் கைவிட இருந்த நிலையில் போராட்டத்தை மீண்டும் போலீசுக்கு, எதிராக கோசமிட்டு மீண்டும் சாலை மறியிலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
போராட்ட களத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விரைவில் இன்று மாலைக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதிகாரிகள் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். சுமார் ஒன்றரை மணி நடந்த இந்த போராட்டத்தால் பெரம்பலூர் நகர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு கடுமையாக ஏற்பட்டது. போலீசார் மாற்றுப்பாதையில் வாகனங்களை அனுப்பி வைத்தனர்.