சென்னையில் சாலையில் சென்ற அரசு பேருந்து திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சாலையில் சென்ற அரசு பேருந்து திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்தது. அந்த பேருந்து அரும்பாக்கம் பகுதியைத் தாண்டி கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே 100 அடி சாலையில் வந்துகொண்டிருந்தபோது பேருந்தின் அடிப்புறத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. இதைக் கண்ட அருகே வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் பேருந்து ஓட்டுநரை எச்சரித்தனர்.

அதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் விரைந்து செயல்பட்டு பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி, பயணிகளை கீழே இறங்க அறிவுறுத்தினார். அதனடிப்படையில் பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய நிலையில், இஞ்சின் பகுதியில் பிடித்த தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் தீபிடித்து எரிந்தது. இச்சம்பவம் தொடர்பாக கோயம்பேடு, அசோக் நகர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

அதனைத் தொடர்ந்து இரு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீச்சியடித்து பேருந்தில் பிடித்த தீயை அணைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முறையான பராமரிப்பின்றி பேருந்தின் இஞ்சினில் எண்ணைக் கசிவு ஏற்பட்டு அதனால் தீப்பிடித்ததா? என்ற சந்த்கேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.