வேதாரண்யம் அருகே சேமிப்பு கிடங்குகளை ஆய்வு செய்த சட்டமன்றக் குழு!
நெல்சேமிப்பு கிடங்கு சீரமைப்பு பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவினா் பார்வையிட்டனர். நாகை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் நடைப்பெற்று வரும் பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவினா் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா தலைமையில் இந்த குழுவின் உறுப்பினர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி,அர்ச்சுணன், ஈஸ்வரன், ராமச்சந்திரன் ,அருள், அன்பழகன் ,பாலசுப்ரமணியன்,செல்லூர் ராஜு ,ராஜ்குமார் ,முகமது ஷாநவாஸ் உள்ளிட்ட 11 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
வேதாரண்யம் அடுத்த கோவில்பத்து பகுதியில் ஆசியாவிலேயே 2 ஆவது மிகப்பெரிய சேமிப்பு கிடங்கான தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தானிய சேமிப்புக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர். கஜா புயலின் போது சேதமடைந்த நெல் சேமிப்பு கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து பார்வையிட்டனர். தற்போது இருப்பில் உள்ள நெல்மணிகளின் தரம் மற்றும் ஈரப்பதத்தின் அளவினை கேட்டறிந்து ஆய்வு செய்தனர். மேலும் ரூபாய் 6 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள தரைதள பணிகள் மற்றும் தானியங்கு முறையில் சரக்குந்துகள் மூலம் கொண்டு வரப்படும் நெல்மணியை சேமிப்பு கிடங்குக்கு அனுப்ப உள்ள திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து கோடியக்கரை வனவிலங்கு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.