கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்கள் எடுத்த முடிவால் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்கள் எடுத்த முடிவால் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் படித்த 2000 மாணவ, மாணவிகள் தங்களுடைய பிறப்பு சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 180 மாணவ மாணவிகள் வேறு பள்ளியில் படிக்கப் போவதாக விண்ணப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாணவி மர்ம மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை கண்டித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தினார்கள். அமைதியான போராட்டம் நடைபெற்ற வந்த நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் பள்ளி கட்டிடங்கள், பள்ளி வாகனங்கள், மாணவ மாணவியரின் சான்றிதழ்கள், என அனைத்தும் தீயில் கருகி போனது. இதனால் பள்ளியில் படித்து வந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளின் நிலை கேள்விக்குறியானது.

மாற்று இடத்தில் பள்ளி வகுப்புகள்

மாணவி இறந்த ஜூலை 13 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பள்ளி வகுப்புகள் நடத்த முடியாமல் சூழ்நிலை ஏற்பட்டது. 3000க்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் 27 ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று நேரடி வகுப்புகள் நடைபெறும் இதற்காக அருகே உள்ள மூன்று பள்ளி கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஏ. வாசுதேவனூர் அருகே உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் தற்காலிகமாக 9, 10, 11, 12, ஆகிய வகுப்புகளுக்கு 1 தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. காலை 9 மணி அளவில் வகுப்புகள் தொடங்கப்படும் எனஅறிவித்த நிலையில் 8 மணியிலிருந்தே மாணவ மாணவிகள் வரத் தொடங்கினர். அருகே உள்ள கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களின் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று பள்ளிப் பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். பின்பு இன்று காலை 10 மணி அளவில் 9, 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்தப் பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இதில் சுமார் 500  க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்பில் கலந்து கொண்டனர்.

சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவர்கள்

இந்த நிலையில் மாணவர்களின் சான்றிதழ்கள், மற்றும் வேறு பள்ளியில் படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு குழு மாவட்ட கல்வி அலுவலர் ராஜூ தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை கனியாமூர் தனியார் பள்ளியில் படித்த 2000 மாணவ மாணவிகள் தீயில் எரிந்த தங்களுடைய 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ்  உள்ளிட்டவை வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர். இதில் 180 மாணவ, மாணவிகள்  வேறு பள்ளியில் படிக்க போவதாக விண்ணப்பித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பெற்றோர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவ மாணவிகள் விருப்பத்திற்கு ஏற்ப வேறு பள்ளியில் படிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகின்றனர்.