கழிவறையில் கிடைத்த 3 கிலோ தங்கம்...அதிகாரிகள் விசாரணை!

கழிவறையில் கிடைத்த 3 கிலோ தங்கம்...அதிகாரிகள் விசாரணை!

சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புடைய 6.5 கிலோ தங்கம்,ரூ.9 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனங்கள்,வெளிநாட்டு சிகரேட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சென்னை, ராமநாதபுரத்தை சோ்ந்த 2 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாயிலிருந்து பொருட்கள் கடத்தல்

துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ்  விமானம்  சென்னை பன்னாட்டு விமானநிலையம் வந்தது. இதில் வரும் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சந்தேகத்திற்குரிய வகையில், வெளியேற முயன்ற சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் (37),மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாதிக் அலி (40) இருவரையும் அதிகாரிகள் சந்தேகத்தில் சோதனை செய்தனர். அப்போது, அவர்களது பேன்ட் பாக்கெட்டில் தங்கப்பசை மற்றும் இரண்டு தங்க செயின்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில், ரூ.1.38 கோடி  மதிப்பிலான 2.98 கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்தது. மேலும், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கழிவறையில் தங்கம்

இதே போல, சென்னை பன்னாட்டு விமான முனையத்தின் வருகை பகுதி கழிவறை அருகே, தங்கப் பசைகள்  அடங்கிய 6  பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்து மதிப்பிட்டதில், 1.63 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.52 கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்தது. மொத்தம், 3 கோடி ரூபாய் மதிப்பிலான, 6.5 கிலோ தங்கம்,மற்றும் ரூ.9 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனங்கள்,சிகரேட்கள் பறிமுதல் செய்த சுங்கத்துறை புலனாய்வு அதிகாரிகள், பயணிகள் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.