ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: 3வது நாளாக தொடரும் ஆவின் பால் விநியோகம் தட்டுப்பாடு குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நிலவி வரும் ஆவின் பால் தட்டுப்பாடு குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,"சென்னையில்  தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பெரும்பான்மையான பகுதிகளில் ஆவின் பால் வழங்கப்படவில்லை என்றும், சில பகுதிகளில் மிகவும் தாமதமாக பால் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆவின் பால் கிடைக்காததால்  வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பால் வழங்கலில் ஆவின் நிறுவனம் அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,"அமுல் நிறுவனத்தின் வருகையும், தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை உயர்வும் ஆவின் நிறுவனத்தின்  பால் கொள்முதலை பாதித்திருக்கின்றன என்பதை தமிழக அரசு உணர வேண்டும். இந்த பாதிப்புகளை போக்கி, ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை அதிகரிப்பதற்கு கொள்முதல் விலையை உயர்த்துவது மட்டும் தான் ஒரே தீர்வு. இதை செய்யாவிட்டால் நாளுக்கு நாள் ஆவின் பால் கொள்முதல்  மோசமடைவதை தவிர்க்க முடியாது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆவின் நிறுவன சிக்கலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையை  லிட்டருக்கு ரூ.7 வீதம் உயர்த்தி, பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்.  மற்றொருபுறம் ஆவின் பால் வணிகத்தையும் பெருக்கி தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை 50% அளவுக்கு  உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.