50 பைசாவுக்கு டி-சர்ட் வாங்க குவிந்த இளைஞர்கள்... கடையை பூட்டிய போலீசாரால் பரபரப்பு...

மணப்பாறையில் 50 பைசாவுக்கு டி-சர்ட் வாங்க இளைஞர்கள் குவிந்ததால் கடையை போலீசார் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

50 பைசாவுக்கு டி-சர்ட் வாங்க குவிந்த இளைஞர்கள்... கடையை பூட்டிய போலீசாரால் பரபரப்பு...

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சின்னக்கடை வீதியில் புதிதாக ஆண்களுக்கான ரெடிமேடு கடை ஒன்று திறப்பு விழா நடந்தது. “லாக் டவுன்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கடையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் கடையின் உரிமையாளர் திறப்பு விழாவை முன்னிட்டு 50 பைசாவுக்கு டி.சர்ட் தருவதாக விளம்பர படுத்தியிருந்தார்.

அதில் காலை 9 மணி முதல் 1 மணி வரை மட்டுமே இந்த சலுகை என அறிவித்திருந்ததால், கடை திறப்பதற்கு முன்பே இளைஞர்கள் மட்டுமல்லாது அதிகளவில் பெண்களும் திரண்டிருந்தனர். இதனையடுத்து கடையின் உரிமையாளர் 50 பைசா வாங்கிக் கொண்டு டோக்கன் வழங்கப்பட்டது. இந்த டோக்கனை வாங்க கூட்டம் முண்டியடித்ததால் இளைஞர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்பகுதி முழுவதும் இரு சக்கர வாகனங்களும், பொதுமக்களும் கூடினர். இதனால் சின்னக்கடை வீதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் விரைந்து கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினார்.

உரிய அனுமதி பெறாமல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டத்தை கூட்டியதாக கூறி எச்சரித்ததால் கடை உரிமையாளர் போலீசார் முன்னிலையிலேயே கடையை மூடினார். புpன்னர் போலீசார் பொதுமக்களை கலைந்து போகக்கூறி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதுடன். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

“லாக் டவுன்” பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கடையை விளம்பரப்படுத்த எண்ணி அதிரடி சலுகையை அறிவித்த நிலையில் திறப்பு விழா அன்றே போலீசார் பெயரைப் போலவே கடையும் முழு லாக்டவுன் செய்துவிட்டனரே என கடை உரிமையாளர் புலம்ப ஆரம்பித்து விட்டார்.