
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 3 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஏன் உத்தரவிடக் கூடாது? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, அது சம்பந்தமாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் கூறி, விசாரணை ஆணையத்தை முடிக்க உத்தரவிடக் கோரி, சுப்பிரமணி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை 3 மாதங்களில் முடித்து, இறுதி அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது என்பது குறித்து ஆறு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.