பெங்களூரில் தரையிறங்க வேண்டிய விமானங்கள், சென்னையில் தரையிறங்கியது ஏன்?
நேற்று இரவு பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியதால் சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு கர்நாடக மாநிலம் பெங்களூரில் மோசமான வானிலை நிலவியது. இதனால் பெங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் பெங்களூரில் தரையிறங்க முடியாமல் சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கின.
இதில்10:25 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து பெங்களூர் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10:35 மணிக்கு டெல்லியில் இருந்து பெங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், இரவு 10:40 மணிக்கு டெல்லியில் இருந்து பெங்களூர் வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10:55 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற ஏர் ஏசியா விமானம் உள்ளிட்ட 14 விமானங்கள் அடுத்தடுத்து சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கின.
இந்த விமானங்களில் வந்த பயணிகள் அனைவரும், விமானங்களை விட்டு கீழே இறக்காமல் விமானங்களிலேயே அமர வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தனர்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில், நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை, வெளிநாட்டு விமானங்கள் பெருமளவு வந்து தரை இறங்கி கொண்டு இருக்கும். அந்த நேரத்தில், பெங்களூரில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள், சென்னையில் வந்து தரை இறங்கியதால், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், தரை தள பணியில் உள்ள, லோடர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதையடுத்து அவசரமாக கூடுதலாக, கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாரிகளும், தரை தள ஓடுபாதை பகுதிக்கு கூடுதல் லோடர் ஊழியர்களும் வரவழைக்கப்பட்டு கூட்டத்தை சமாளித்தனர். அதன் பின்பு இன்று நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பெங்களூரில் வானிலை சீரடைந்த பின்பு, இந்த விமானங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக பெங்களூர் புறப்பட்டு சென்றன.
இதையும் படிக்க:"அமைச்சர் துரைமுருகன் தனது மகளை ரகசியமாக காதலனுடன் பேச அனுமதிப்பாரா?" முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் கேள்வி!