தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை நாளை தாக்கல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நாளை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை நாளை தாக்கல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை காலை 11.30 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின் போது, வெள்ளை அறிக்கையை அமைச்சர் வெளியிட உள்ளதாகவும், இதில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள், எந்தெந்த வழிகளில் அவை செலவிடப்பட்டன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம்பெறும் எனத் தெரிகிறது. 
 
120 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக அது இருக்கும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கடுமையான விவாதங்களைக் கிளப்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
 
திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைய உள்ள நிலையில், நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என ஆளுநா் உரையில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார். இதற்கு முன்பாக, கடந்த 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த சி.பொன்னையன், நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது, நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.