12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு எப்போது வெளியாகும்.?

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு எப்போது வெளியாகும்.?

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காரணமாக 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்க, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, எந்த வகையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.

மதிப்பெண் கணக்கீடு தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு, 5 வகையான மதிப்பீட்டு வழிமுறைகளை அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களுடன், 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. 

ஏற்கனவே 12-ம் வகுப்பு மாணவர்களின் 10-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை தேர்வுத்துறை கோரியிருந்த நிலையில், அவற்றில் இருந்து அதிகளவில் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.