அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு நேர்காணல் எப்போது?

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான நேர்காணல் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு நேர்காணல் எப்போது?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா கடந்த ஏப்ரல் 11-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய டெல்லி JNU பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா ராணி சுங்கத் ஆகியோர் அடங்கிய தேடல் குழு அமைக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 10 பேரை நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களாக, தேடல் குழு இறுதி செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் 5 பேர், சென்னை ஐ.ஐ.டி.யின் பேராசிரியர்கள் இருவர் என்று நேர்முகத் தேர்வுக்கு தகுதியான 10 பேருக்கான நேர்காணல் வரும் 9-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தை ஆராய்ச்சியில் எவ்வாறு மேம்படுத்துவது? பல்கலைக்கழகத்தின் நிதித் தேவையை ஈடுகட்டுவது எப்படி? உலகளாவிய தரவரிசையில் இடம்பெறச் செய்வது எப்படி? போன்ற கேள்விகள் நேர்காணலில் கேட்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேர்காணல் முடிந்த பின், அதிலிருந்து தகுதியான 3 பேரை இறுதி செய்து, அவற்றை ஆளுநரிடம் தேடல் குழு சமர்ப்பிக்கும். மூவரில் இருந்து ஒருவரை துணைவேந்தராக தேர்வு செய்து ஆளுநர் அறிவிப்பு வெளியிடுவார்.