இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டுமா?..... ஆதார் இணைப்பு அவசியம்.... அறிவித்த தமிழ்நாடு அரசு!!!

இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டுமா?..... ஆதார் இணைப்பு அவசியம்.... அறிவித்த தமிழ்நாடு அரசு!!!

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆதார் எண் கட்டாயம்:

மத்திய அரசு தனது திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகள் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், தமிழக அரசின் திட்டங்களிலும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.  குறிப்பாக உதவித்தொகை, ஓய்வூதியம் பெறுவோருக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு திட்டம்:

இந்நிலையில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளின் ஆதார் எண் இணைப்பையும் கட்டாயமாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண்குழந்தைகளின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் வைக்கப்படுகிறது.  இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது.  அந்த வைப்பு நிதிக்கான ஆவணம் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில் மத்திய அரசின் விதிகள் படி, திட்டப்பயனாளிகள் ஆதார் இணைப்பு கட்டாயமாகிறது. இத்திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகள், ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை இதுவரை ஆதார் எண் பெறப்படாத நிலையில், ஆதாருக்கு பெற்றோர் மூலம் விண்ணப்பித்து, அதைக் கொண்டு திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க வேண்டும். ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, ஆதார் விண்ணபித்த போது வழங்கப்படும் ஆவணம் அல்லது ஆதார் பெறுவதற்கான விண்ணப்ப நகல் வைத்திருக்க வேண்டும். 

இதையும் இணைக்க..:

அத்துடன், புகைப்படத்துடன் கூடிய வங்கிக்கணக்கு புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் பாஸ்புக், ஓட்டுநர் உரிமம், தாசில்தார் உள்ளிட்ட சான்றொப்ப அதிகாரியால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ”மோடியை விட குறைவாக தான் பேசியுள்ளோம்....தலைவர்களுக்கு அவசியமான இரண்டு...” பிடிஆர் கூறியதென்ன!!!