அதிமுக பிரச்சாரத்திற்கு வராதவர்களுக்கு நூறுநாள் வேலை கிடையாது... கிராம மக்கள் வேதனை...

அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு வராதவர்களுக்கு நூறுநாள் வேலை கிடையாது என்று விரட்டப்பட்டதாக பெரியேரிப்பட்டி கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.   

அதிமுக பிரச்சாரத்திற்கு வராதவர்களுக்கு நூறுநாள் வேலை கிடையாது... கிராம மக்கள் வேதனை...

சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் முத்துநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் முருகன் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் மணி, ஒன்றிய சேர்மன் ராஜேந்திரன்மற்றும் கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பெரியேரிப்பட்டி ஊராட்சியில் பணியாற்றும் நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களை அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு அழைத்ததாகவும், அப்படி வரவில்லையென்றால் வேலை வழங்காமல் விரட்டியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து 100 நாள் வேலை திட்ட பெண்கள் திமுக எம் எல் ஏ ராஜேந்திரனிடம் தெரிவித்த நிலையில், ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.