விக்னேஷ் லாக்அப் மரண வழக்கு.. 3 வது முறையாக ஜாமீன் கோரி மனுத்தாக்கல்.. 6 காவலர்களுக்கு ஜாமீன் கிடைத்ததா?

விக்னேஷ் லாக்அப் மரண வழக்கு.. 3 வது முறையாக ஜாமீன் கோரி மனுத்தாக்கல்.. 6 காவலர்களுக்கு ஜாமீன் கிடைத்ததா?

போலீஸ் காவலில் இருந்த விக்னேஷ், மரணமடைந்த வழக்கில் கைதான காவல்துறையினர் 6 பேருக்கு ஜாமீன் வழங்கி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழப்பு

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை, ஏப்ரல் 18ஆம் தேதி தலைமை செயலக காலனி காவல் நிலையத்தினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், மறுநாள் மர்மமான முறையில் காவல் நிலையத்தில் உயிரிழந்தார்.

கொலை வழக்காக மாற்றிய சி.பி.சி. ஐ.டி

சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றிய சி.பி.சி. ஐ.டி. போலீசார், தலைமை செயலக காலனி சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குமார், முனாப், காவலர் பவுன்ராஜ், ஆயுதப்படை காவலர்கள் ஜெகஜீவன், சந்திரகுமார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமீன் கேட்டு மனு

6 பேரும் ஜாமீன் கேட்டு ஏற்கனவே 2 முறை தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

6 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவு

இந்நிலையில், 6 பேரும் மீண்டும் ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மே 7ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், 90 நாட்களை கடந்தும், விசாரணையை முடித்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யாததால், தங்களுக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க வேண்டுமென காவலர்கள் சார்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 6 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.