நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு!

நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு!

ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை பதிலுரையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,  தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தரத்திற்கு ஏற்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை வந்தவண்ணம் உள்ளதால், அவை முதலமைச்சரின் அனுமதி பெற்று விரைவில் மாநகராட்சிகளாக உருவாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : மகாத்மா காந்தி வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு ஏப்ரல் 2 முதல்...அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்!

இதே போல, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், அவிநாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு போன்ற பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தவும், சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் கோரிக்கை வருவதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

எனவே, நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும், ஊராட்சி உள்ளாட்சிகள் அமைப்பு பதவி டிசம்பர் 2024 - ல் நிறைவடைவதால் அதற்கு பின்னர் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை எங்கு இணைக்கலாம் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து முதலமைச்சர் உத்தரவை பெற்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.