சென்னையில் போக்குவரத்து மாற்றம்... சுதந்திரதினவிழா ஒத்திகை நிகழ்ச்சிக்காக...

சுதந்திர தின விழா ஒத்திகையையொட்டி சென்னையில் நாளை  மற்றும் 9, 13 ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்... சுதந்திரதினவிழா ஒத்திகை நிகழ்ச்சிக்காக...

இந்தியாவின் 75வது சுதந்திர தினவிழா வரும் 15 ஆம் தேதி, சென்னை கோட்டையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, நாளை மற்றும் 9,13 ஆகிய தேதிகளில் சுதந்திர தின விழாவின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஒத்திகை நடைபெறும் இந்த மூன்று நாட்களிலும் காலை ஆறரை மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. 

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஒத்திகை நடைபெறும், நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரையிலும், போர் நினைவு சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.  

இதேபோல், காமராஜர் சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக பாரிமுனையை அடையலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பாரிமுனையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்றடையலாம்.

அண்ணா சாலையிலிருந்து கொடிமர சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக பாரிமுனையை செல்லலாம் எனவும் தெரிவித்துள்ள போக்குவரத்து காவல்துறை, வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.