முதலமைச்சரின் இன்றைய பயண விவரங்கள்..!
சேலம் செல்லும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு..!
சீலநாயக்கன்பட்டியில், இன்று நடைபெறும் அரசு விழாவில், மாநில அளவில் நமக்கு நாமே திட்டம், நகர்புற வேலை வாய்ப்புத் திட்டம், ஆகிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 9.30 மணிக்கு ஓமலூர் சென்றடையும் முதலமைச்சர் ஸ்டாலின், கார் மூலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். வழிநெடுகிலும் அவருக்கு பொதுமக்கள், கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் நடைபெறும் விழாவில் 30,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் முடிந்த திட்டங்கள் மற்றும் பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் முதலமைச்சர் உரையாற்ற உள்ளார்.
இதற்காக பயனாளிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு சேலம் 5 ரோட்டில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடைபெறும் படத்திறப்பு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜாவின் உருவ படத்தை திறந்து வைத்து பேசுகிறார். அந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். கே.என்.நேரு, ஆட்சியர் கார்மேகம் மற்றும் அதிகாரிகள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். முதலமைச்சர் வருகையை ஒட்டி அங்கு மூவாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்.