தகுதியுடையவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், பொதுமக்கள் கவனத்துடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தகுதியுடையவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

இது குறித்து ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள  கடிதத்தில்,

கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் மக்கள் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

தொற்று உறுதியானால் மருத்துவத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், தொற்று இல்லை என முடிவு வந்தால் தொடர்ந்து உடல்நிலையை சுய கண்கானிப்பு செய்து கொள்ள வேண்டும் குறிப்பிட்டுள்ள ராதாகிருஷ்ணன், அனைத்து அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மாவட்ட அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை விகிதத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனக் கூறியுள்ள ராதாகிருஷ்ணன், தேவையான மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையி்ல் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் தான் உள்ளது, எனினும் மக்கள் அலட்சியமாக இல்லாமல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும்,  தகுதியுடையவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.