"ஊரடங்கு முடியும்வரை மின் தடையில்லை..." அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு!!

தமிழகத்தில், ஊரடங்கு முடியும் வரை பராமரிப்புப் பணிகளுக்காகச் செய்யப்படும் மின்தடை செய்வது ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

"ஊரடங்கு முடியும்வரை மின் தடையில்லை..." அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு!!

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருப்பதாலும், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாலும், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடப்பதாலும், தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்புப் பணிகளுக்காக கொடுக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த டிசம்பர் 2020 முதல் ஆறு மாதக் காலமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. தற்போது மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்புப் பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், பராமரிப்பு பணிகள் எவ்வித தொய்வின்றி விரைந்து எடுத்துக் கொள்ளப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.