தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை - போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்திருக்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை ஏற்றத்தால் மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்த பட்ட போதிலும், தமிழகத்தில் உயர்த்த வாய்ப்பில்லை என்றார்.
மேலும் போக்குவரத்து துறைக்காக தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுக்குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் சிவசங்கர், E-vehicle தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வருவதற்கு, தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் விரைவில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 2000 பேருந்துகளிலும் பயணிகளின் முகங்களை அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
புதிய பேருந்துகள் வாங்குவது குறித்து ஜெர்மன் நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் புதிய பேருந்துகளுக்கான உதிரிபாகங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.