புகார் கொடுக்க சென்ற பெண்ணை...சாதி பெயரைக் கூறி வெளியேற்ற முயற்சித்த உதவி ஆய்வாளர்...!
கோவை மாவட்டம் போத்தனூரில் கணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி காவல்நிலையம் சென்ற பெண்ணை, சாதி பெயரை கூறி காவல்துறையினரே அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலங்கல் பகுதியை சேர்ந்த லட்சுமி பிரியா - பத்திரன் தம்பதிக்கு ஒரு மகள் இருந்த நிலையில், பத்திரனுக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இதனை அறிந்த லட்சுமி பிரியா, தனது கணவனை பல முறை கண்டித்தும் பத்திரன் உறவை முறித்துக் கொள்ளாததால், போத்தனூர் காவல்நிலையத்திற்கு சென்று தனது கணவருக்கு புத்தி மதி கூறி அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த உதவி ஆய்வாளர் விஜயலட்சுமி, லட்சுமி பிரியா மற்றும் உடன் வந்தவர்களை பார்த்து என்ன சாதி என கேட்டுள்ளார்.
இதையும் படிக்க : கள்ளக்குறிச்சி மாணவி தாயார் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு...!
அவர்கள் தங்கள் சமூகத்தின் பெயரை கூறவே, தரையில் அமரும் படி கூறி, இனி இது போன்ற புகாருக்கு காவல்நிலையம் வர மாட்டேன் என லட்சுமி பிரியாவிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்கிய விஜயலட்சுமி, ரப்பர் குழாயால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த லட்சுமி பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உதவி ஆய்வாளர் விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.