சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு.. ஊர்வல நிகழ்ச்சியில் ஏற்பட்ட சோகம்!!

நாகை அருகே சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு..  ஊர்வல நிகழ்ச்சியில் ஏற்பட்ட சோகம்!!

நாகை மாவட்டம், திருச்செங்காட்டாங்குடியில் உத்திராபதிஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பர ஊர்வல நிகழ்வு நள்ளிரவில் நடைபெற்றது.

சப்பரமானது தெற்கு வீதி பகுதியில் திரும்பும்போது சப்பரத்தின் சக்கரத்துக்கு முட்டுக்கட்டை போடும் பணியை தீபன்ராஜ் என்பவர் செய்துள்ளார். அப்போது அவர் சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சை அருகே நடந்த திருவிழாவின்போது, சப்பரத்தில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான நிலையில், நாகை அருகே சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த தீபன்ராஜ் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவருடைய குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.