சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் கோவில் திடல்- சிசிடிவி காட்சி வெளியாகி வேதனை

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகராஜா கோவில் திடல், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் கோவில் திடல்- சிசிடிவி காட்சி வெளியாகி வேதனை

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்று நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் உள்ள இந்த கோவிலின் முன் பக்கம் நாகராஜா திடல் உள்ளது. கோவில் திருவிழா காலங்களில் இங்கு கலை நிகழ்ச்சி நடப்பதும், மாநகராட்சியின் சார்பில் பொருட்காட்சி மற்றும் முக்கிய நிகழ்வுகள் அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் நடப்பது வழக்கம்,

இந்நிலையில் சமீப நாட்களாக நாகராஜா கோவில் திடலில் இரவு நேரங்களிலும் மதுபானம் அருந்திவிட்டு பிரச்சனைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதவிர இளம்பெண்களுடன் இளைஞர்கள் கும்மாளமிடும் காட்சிகளும் இரவு வேளைகளில் வாடிக்கையாக மாறிவிட்டது.

இந்நிலையில் அங்கு இரவு நேரத்தில் இரு இருசக்கர வாகனத்தில் வரும் இரு ஆண்கள் இரு பெண்கள் என 4 பேர் திடலின் மறைவான பகுதிக்கு சென்று அரை மணி நேரம் கழித்து மீண்டும் அதே பாதையில் வந்து இருசக்கர வாகனத்தில் ஏறி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.  எனவே இதுகுறித்து போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி கோவிலின் பாரம்பரியத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.