பள்ளிக்கு இடம் ஒதுக்க ஒத்துழைக்காத ஊர் மக்கள்... பள்ளி தலைமையாசிரியரின் நூதன  போராட்டம்... 

பள்ளி தலைமை ஆசிரியர் தனது மதிய உணவை பள்ளி அமைந்துள்ள சாலையின் நடுவே அமர்ந்து உணவருந்தி எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளிக்கு இடம் ஒதுக்க ஒத்துழைக்காத ஊர் மக்கள்... பள்ளி தலைமையாசிரியரின் நூதன  போராட்டம்... 

காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி தற்போது அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் 213 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அரசுப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், திருக்காளிமேடு குளக்கரையைச் சுற்றி  மூன்று கட்டிடங்களாக பள்ளி செயல்பட்டு வருகிறது. நீர்நிலை பகுதியில் செயல்பட்டுவரும் அரசுப்பள்ளி பாதுகாப்பின்றி உள்ளதாகவும், அதனை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும் நிலையில் திருக்காலிமேடு பகுதியில் சுற்றி உள்ள பொதுமக்களும் பள்ளிக்கு இடம் ஒதுக்க ஒத்துழைப்பு தராமல் உள்ளனர்.

இதன் காரணமாக பள்ளி இடமாற்றம் செய்ய முடியாமலும், தற்போது பெய்த கனமழையின் காரணமாக குளக்கரை சுற்றி உள்ள அரசுப் பள்ளி பழுதான நிலையில் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் கலாவல்லி என்பவர் பள்ளியை இடமாற்றம் செய்ய இடம் ஒதுக்க ஒத்துழைக்க மறுக்கும் அப்பகுதி மக்களை கண்டித்து தனியாளாக எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பள்ளி அமைந்துள்ள சாலையின் நடுவில் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டு அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து நூதன போராட்டம் செய்து எதிர்ப்பைத் தெரிவித்தார். அரசுப் பள்ளி பெண் தலைமை ஆசிரியரின் செய்கையால் திருக்காலிமேடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.