காவிரி நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.! அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.! 

காவிரி நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.! அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.! 

காவிரியாற்றில் வரும் கூடுதல் தண்ணீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னையில் குடிநீர் குழாய்களில் நேரடியாக மின் மோட்டார் பொறுத்தப்பட்ட இணைப்பைக் கண்டறிந்து துண்டிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் நேரு அறிவுறுத்தியுள்ளார். மேலும் குடிநீர் வாரிய அனைத்து பணிமனை பொறியாளர்களும் குடிநீரின் தரம் மற்றும் குடிநீர் கட்டமைப்புகளை பரிசோதிக்க வேண்டும் என பல்வேறு முடிவுகள் ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, சென்னை மொத்த குடிநீர் தேவை 1150 எம்எல்டி என்றும், அதில் 240 முதல் 250 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றும், மீதமுள்ள குடிநீரை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்த அவர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளோம் என்றும் கூறினார்.

 மேலும் காவிரி ஆற்றில் மிகை நீர் இருக்கும் பட்சத்தில் அதனை சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்தை  செயல்படுத்த முயற்சிக்கிறோம் என்ற அவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட திட்டம் இது என்றும், இது நடைமுறைக்கு வருவதற்கு 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், லாரிகளில் குடிநீரை விநியோகம் செய்வதை முழுவதுமாக நிறுத்தி குழாய்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும், சென்னையில் 8.60 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சரி செய்யப்பட்டுள்ளது எனக்  கூறினார்.