அக்கா இறந்ததை மறைத்த தாய்... விமான நிலையத்தில் கதறிய ஒலிம்பிக் வீராங்கனை...
திருச்சியைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி, ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்பதற்காக, அவரது உடன் பிறந்த சகோதரி இறந்த செய்தியை கூட அவரது தாய் மற்றும் உறவினர்கள் மறைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம் பிடித்த தனலட்சுமி, டோக்கியோவில் இருந்து நேற்று திருச்சி வந்தடைந்தார்.
இதற்கிடையில், தனலட்சுமி டோக்கியோவில் இருந்த நேரத்தில், அவரது அக்கா உடல்நிலைக் குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி தனலட்சுமியின் மனதை பாதித்து விடும் என்பதாலும், தனலட்சுமி ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும், அவரது அக்கா இறந்த விசயத்தை அவரது தாய், தனலட்சுமியிடம் கூறாமல் மறைத்துளார்.
இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் அவரது அக்கா இறந்த செய்தியை அறிந்த தனலட்சுமி, கதறி அழுதார். பின்னர் தனலட்சுமிக்கு ஆறுதல் கூறிய அவரது குடும்பத்தினர், வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.